ஹல்துமுள்ளை கல்விப் பிரிவைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளில் கோவிட் 19 தொற்று காரணமாக ஒரு பாடசாலை மூடப்பட்டுள்ளதுடன், ஏனைய மூன்று பாடசாலைகளில் குறிப்பிட்ட வகுப்புக்களைக் கொண்ட கட்டிடத் தொகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, ஹல்துமுள்ளை பொது சுகாதாரப் பரிசோதகர் அசங்க சம்பத் தெரிவித்தார்.

கொஸ்கம வித்தியாலயத்தில் அதிபர், ஆசிரியர்கள் மூவருக்கு கோவிட் 19 தொற்று உறுதியானதினால், அவ்வித்தியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அத்துடன் சொரகுன மகா வித்தியாலயத்தில் ஆண்டு 1, ஆண்டு 10, ஆண்டு 11 ஆகிய வகுப்புகளைக் கொண்ட கட்டிடத் தொகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அமிலகம மகா வித்தியாலயத்தில் ஆண்டு 5 வகுப்புகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியும் மூடப்பட்டள்ளது. அடுத்து இலுக்பெலெஸ்ஸ மகா வித்தியாலயத்தின் ஆண்டு 3 வகுப்புளைக் கொண்ட கட்டிடத் தொகுதியும் மூடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட வித்தியாலயமொன்றிற்கும், ஏனைய மூன்று வித்தியாலயங்களின் குறிப்பிட்ட வகுப்புக்கள் உள்ள கட்டிடத் தொகுதிகளுக்கும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதிபர், ஆசிரியர்கள் மூவர் மற்றும் நான்கு மாணவர்கள் ஆகியோருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக, அவர்களிடம் மேற்கொண்ட ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், தொற்றாளர்களுடன் உறவினைப் பேணியவர்களை அடையாளம் கண்டு, அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், லுணுகலையில் மூன்று சிறுபிள்ளைகள் உள்ளிட்டு 13 பேர் கோவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளனர். 12 மாத ஆண் குழந்தை மற்றும் 3, 4 ஆகிய வயதுகளைக் கொண்டவர்களுக்கே தொற்று உறுதியாகியுள்ளது.
லுணுகலை பொது சுகாதாரப் பணியகத்தில் 18-11-2021ல் மேற்கொள்ளப்பட்ட ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனையின் போதே, மூன்று சிறு பிள்ளைகள் உள்ளிட்டு 13 பேர், கோவிட் 19 தொற்றுக்கிழக்காகியமை தெரியவந்துள்ளதாக, லுணுகலை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
எம். செல்வராஜா, பதுளை










