பாதாளக் குழுக்களுக்கு கடந்த காலங்களில் அரசியல் பாதுகாப்பு கிடைக்கப்பெற்றுவந்தது எனவும், தற்போது அந்நிலைமை மாறியுள்ளது எனவும் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட அவர், நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” குற்றவாளிகள் சிலர் வெளிநாடுகளுக்குச்சென்று, இங்கு குற்றங்களை வழிநடத்துகின்றனர். தமது சொந்த பெயரில்கூட முன்னிலையாக துப்பில்லாத அந்த தரப்பினருக்கு இதற்கு முன்னர் கிடைக்கப்பெற்றுவந்த அரசியல் பாதுகாப்பு தற்போது கிடைப்பதில்லை.
மேற்படி குற்றவாளிகளின் பின்னணியில் அரசியல் மற்றும் அரசியல் பாதுகாப்பு இருந்தது. இது அனைவருக்கும் தெரியும். தற்போது அந்த பாதுகாப்பு கிடைப்பதில்லை. எனினும், இங்குள்ள போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், முப்படைகளில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் சில பொலிஸ் அதிகாரிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
அத்துடன், இதற்கு முன்னர் அரசியல் பாதுகாப்பை வழங்கிய தரப்பினரை நேரடியாக – முறைமுகமாக பயன்படுத்திவருகின்றனர். இவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.
