வட கொரியாவின் அணுவாயுதத் திட்டத்திற்கு யார் பொறுப்பு என்பதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கூட்டத்தின்போது, அந்த நாடுகள் ஒன்றையொன்று சாடியுள்ளன.
அண்மையில் வட கொரியா பல முறை ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது.
அமெரிக்காவும் தென் கொரியாவும் நடத்திய கூட்டு இராணுவப் பயிற்சிகளால்தான் வட கொரியா அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சீனாவும் ரஷ்யாவும் குறைகூறின.
கூட்டு இராணுவப் பயிற்சிகள் தேவையற்றவை என்று கூறிய அவை, தற்காப்புக்காகத்தான் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா என்று கேள்வி எழுப்பின.
வட கொரியா மீது கூடுதல் தடைகளை விதிப்பதைத் தடுக்கச் சீனாவும் ரஷ்யாவும் வட கொரியாவை தற்காத்து பேசுவதாய் அமெரிக்கா குற்றம் சுமத்தியது.
மாறுபட்ட கருத்துகளால், வட கொரியாவின் அணுவாயுதத் திட்டம் பற்றிப் பாதுகாப்பு சபையால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாமல் உள்ளது.
வட கொரியாவின் அணுவாயுதத் திட்டத்துக்காகவும் ஏவுகணைச் சோதனைகளுக்காகவும் ஐக்கிய நாடுகள் சபை அதன் மீது தடைகளை விதித்துள்ளது.
எனினும் 2022 மே மாதம் கொண்டுவரப்பட்ட வட கொரியா மீது புதிய தடைகளை விதிக்கும் தீர்மானத்திற்கு எதிராக சீனா மற்றும் ரஷ்ய தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இருந்தது. புதிய தடைகளுக்கு முன்னர் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான பேச்சுவார்த்தை புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அப்போது கூறப்பட்டது. சீனா மற்றும் ரஷ்யா தற்போதும் அந்த நிலைப்பாட்டையே வெளியிட்டுள்ளன.