” அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்.” – என்று சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவிடம், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹரின் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்தார்.
ஹரின் பெர்ணான்டோ தன்னை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டமை தொடர்பில் சபையில் நேற்று (7) ஆளுங்கட்சி எம்.பியால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் இடம்பெறும் பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையில் எனக்கு அதிருப்தி இல்லை. நேற்றுகூட 900 பரிசோதனைதான் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு முன்வரவில்லை. இந்நிலையில் நான் முன்வந்து, அந்த பரிசோதனைகளை செய்யுங்கள், வலிக்காது என்ற தகவலை மக்களுக்கு வழங்கியுள்ளேன். தேவையென்றால் கேள்வி எழுப்பிய எம்.பிக்கு பிரசோதனை அறிக்கையின் முடிவையும் அனுப்புகின்றேன்.
நாட்டில் தற்போது தனியார் வைத்தியசாலைகளிலும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. இது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. அரச வைத்தியசாலைகளில் மட்டுமே பிசிஆர் பரிசோதனை நடக்கின்றது என நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு இல்லை. தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றது. வீடுகளுக்கே வந்து மாதிரிகளை பெறுகின்றனர். அதற்கு கட்டணம் செலுத்தவேண்டும்.
அதேவேளை, அனைத்து எம்.பிக்களையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.