ஒரே வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்ட காலி மாவட்டத்தினதும் நுவரெலிய மாவட்டத்தினதும் பிரதேச செயலக அதிகரிப்பு பாரபட்சமான முறையில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுவதாகவும், அவ்வாறு இல்லாமல் நுவரெலிய மாவட்டத்தில் ஐந்து புதிய பிரதேச செயலகங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் கோரி மலையக அரசியல் அரங்கம் முன்னெடுக்கும் பொதுமக்கள் மனுவிற்கு ஆதரவு தருமாறும் முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
2016 ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றின் ஊடாக நான் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, பிரேரணைக்கு பதில் அளித்த அப்போதைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன நுவரெலிய மாவட்ட பிரதேச செயலகங்களை ஐந்தில் இருந்து பத்தாக உயர்த்துவதற்கு உறுதி அளித்தார்.
2018 ஆம் ஆண்டு நுவரெலிய மாவட்ட அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்களை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் சந்தித்த அமைச்சர் வஜிர அபேவர்தன ஐந்து புதிய பிரதேச செயலகங்களை அமைப்பதற்கு உத்தரவாதம் அளித்ததுடன் அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் சமர்ப்பித்து அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டார்.அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் நுவரெலியாவுக்கு மேலதிகமாக காலி மாவட்டத்திலும் (அமைச்சரின் மாவட்டம்) மேலதிக மூன்று பிரதேச செயலகங்களை அமைக்க அனுமதி பெறப்பட்டு இருந்தது.
2019 ஒக்டோபர் 29ஆம் திகதி வெளியான வர்த்தமானியில் நுவரெலிய மாவட்டத்தில் புதிய ஐந்து பிரதேச செயலகங்களும் , காலி மாவட்டத்தில் புதிய மூன்று பிரதேச செயலகங்களும் உருவாக்கப்படுவதற்கான பிரகடனம் வெளியானது.
2020 மார்ச் முதலாம் திகதி முதல் நுவரெலிய மாவட்டத்தில் புதிய ஐந்து பிரதேச செயலகங்களை திறப்பதற்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆகும் போது காலி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மூன்று பிரதேச செயலகங்கள் பத்தேகம இரண்டாகப் பிரிக்கப்பட்டு வந்துரம்ப என்ற புதிய பிரதேச செயலகமும், ஹிக்கடுவை பிரதேச செயலகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மேலதிகமாக ரத்கம, மாதம்பாகம ஆகிய புதிய பிரதேச செயலகங்களும் அமைக்கப்படுள்ளன.
ஆனால் அதே வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்ட நுவரெலிய மாவட்டத்தின் ( அம்பகமுவ ) நோர்வூட், ( நுவரெலிய) தலவாக்கலை, ( வலப்பன) ராகலை, ( கொத்மலை) திஸ்பனை, (ஹங்குரங்கெத்த) மத்துரட்ட புதிய ஐந்து பிரதேச செயலகஙலகளும் நடைமுறைக்கு வரவில்லை.
பாராளுமன்றில் அதற்கான பிரேரண முன்வைத்தவன் என்றவகையில், எனது தலைமையில் இயங்கும் மலையக அரசியல் அரங்க உறுப்பினர்களுடன் 2021 நவம்பர் மாதம் நுவரெலிய மாவட்டச் செயலாளர் திரு. நந்தன அவர்களைச் சந்தித்து இது குறித்த பேச்சுவார்த்தை நடாத்தியதுடன் புதிய பிரதேச செயலகங்களை அதைக்குமாறு கோரிக்கை விடுத்து இருந்தோம்.
ஆனாலும் தலவாக்கலை நகரில் புதிய பிரதேச செயலகத்துக்குப் பதிலாக ‘உப பிரதேச செயலகம்’ ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இது
– உயர் தீர்மானங்களை எடுக்கும் பாராளுமன்ற உறுதிப்பாட்டுக்கும்
– அமைச்சரவையின் கூட்டுத் தீர்மானத்துக்கும்
– வர்த்தமானிப் பிரகடனத்துக்கும்
எதிரானது என்பதை வலியுறுத்துவதுடன் காலி மாவட்டத்திற்கும் நுவரெலிய மாவட்டத்திற்கும் பாரபட்சமான முறையில் அரசாங்கம் தீர்மானம் எடுத்து செயல்படுவதாகவும் மாவட்ட மக்கள் உணர்கிறார்கள் என்றும் இந்த பாரபட்சத்தை நிவர்த்தி செய்து நாட்டில் ஏனைய மாவட்ட மக்களைப் போன்று நுவரெலிய மாவட்ட மக்களுக்கும் நிர்வாகத்தில் சமவாய்ப்பு வழங்குமாறும்
கோரி,
‘மலையக அரசியல் அரங்கம்’ பொதுமக்கள் மனு ஒன்றைத் தயாரித்து அதற்கான கையெழுத்து இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.இதில் கையொப்பமிடுவதன் மூலம் நுவரெலிய மாவட்ட மக்களுக்கு நீதி கிடைக்க பொதுமக்கள் தமது ஒருமைப்பாட்டினைத் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
