புதிய அரசமைப்பு: நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்குமாறு யோசனை!

புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என்பது போலியான வாக்குறுதியாக மாறிவிட கூடாது. எனவே, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கும் யோசனை வெகுவிரைவில் முன்வைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் போது புதிய அரசியமைப்பு உருவாக்கம், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தார். இதற்காகவே மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணையளித்தார்கள். இந்த அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளது. இருப்பினும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா பலமுறை கேள்வியெழுப்பிய போதும் இதுவரையில் சிறந்த பதில் கிடைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக அரசியலமைப்பை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை மாத்திரமே மேற்கொண்டார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட பணிகளை விரைவுப்படுத்தி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக ஜனாதிபதி உட்பட பிரதமர் குறிப்பிட்டார்கள். ஆனால் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
மக்கள் விடுதலை முன்னணியின் பத்தரமுல்ல காரியாலயத்தில் தயாரிக்கும் வரைவை புதிய அரசியலமைப்பு வரைவு என்று குறிப்பிட முடியாது.

புதிய அரசியலமைப்புக்கான பணிகளை அரசாங்கம் இந்த ஆண்டு மேற்கொண்டால் சகல தரப்பினருடன் விரிவாக கலந்துரையாடி இரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் புதிய யாப்பினை அறிமுகப்படுத்த முடியும்.” – எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles