புத்தளத்தில் கோர விபத்து – ஒருவர் பலி

புத்தளம் , சாலியவெவ – 16 ஆம் கட்டை பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைத்துள்ளனர்.

இந்நிலையில், அநுராதபுரம் , புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கிப் பயணம் செய்த தனியார் பஸ் ஒன்றும், புத்தளம் பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த வேண் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த, இந்த விபத்தில் வேனின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அந்த வேனில் சாரதிக்கு அருகில் இருந்து பயணம் செய்த மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

அத்துடன், குறித்த தனியார் பஸ்ஸில் பயணித்த மேலும் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தில் வேனின் முன் பக்கம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், தனியார் பஸ்ஸின் முன் பக்கம் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் சாலியவெவ பொலிஸார் கூறினர்.

மேலும், விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் அங்கிருந்தவர்களால் சாலியாவெவ 17 ஆம் கட்டை பகுதியில் உள்ள அளுத்கம கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக இன்றிரவு புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலியவெவ பொலிஸார் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கோர விபத்து அந்தப் பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles