புலம்பமாட்டோம்: கள்வர்களை கண்டுபிடியுங்கள்! ஜனாதிபதிக்கு நாமல் சவால்!!

‘கள்வர்களை கண்டுபிடியுங்கள். நாங்கள் புலம்பவில்லை. முடிந்தால் உகண்டாவில் பதுக்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் பற்றியும் விசாரியுங்கள்.”

இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச.

சிஐடியில் நேற்று வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே நாமல் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ ஆட்சி மாற்றம் இடம்பெற்ற பின்னர், முன்னாள் ஆட்சியில் இருந்தவர்களை அழைத்து விசாரிக்கும் நடைமுறை தொடர்கின்றது. இது தேர்தல் காலம் என்றபோதிலும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே வருகை தந்திருந்தேன்.

எம்மை பற்றி மக்கள் மத்தியில் பொய்களைக்கூறி தவறான விம்பத்தை தோற்றுவித்துள்ளனர். நீதிமன்றம்மூலம் மட்டுமே நாம் குற்றவாளிகள் அல்லர் என்பது நிரூபனமாகும். அதனால்தான் விசாரணைகளுக்கு அழைக்கப்படும்போது வருகை தருகின்றோம்.

2010 – 2015 காலப்பகுதியில் எனது அலுவலகத்துக்கு வந்து, பணம் வைக்கப்பட்டுள்ளதாக நபரொருவர் கூறியுள்ளாராம். அது பற்றி விசாரிக்கவே இன்று (நேற்று) அழைக்கப்பட்டிருந்தேன். இது அநாமதேய முறைப்பாடாகும்.

நல்லாட்சி காலத்திலும் இப்படிதான் விசாரணைகள் நடந்தன. இறுதியில் குற்றமற்றவர்களென நிரூபனமானது. இதேபோல உகண்டா மற்றும் சீசல்ஸ் தொடர்பிலும் விசாரணை நடத்துங்கள். உகண்டா, சீசல்ஸ் ஆகிய நாடுகளின் பணம் பதுக்கப்பட்டுள்ளது எனக் கூறுபவர்களைக்கூறியும் அழைத்து விசாரியுங்கள்.

மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல்போகும்போது அரசியல் பழிவாங்கல் வேட்டையை ஆரம்பிக்கக்கூடாது. நாம் குற்றமற்றவர்கள். எதற்கும் தயார்.” – என்றார் நாமல் ராஜபக்ச.

Related Articles

Latest Articles