பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்சஸ் காணி – அரசு உறுதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்சஸ் காணி வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கை ரீதியிலான தீர்மானமாகும். இதனை வழங்குவதற்கு தற்போது காணப்படும் நடைமுறைச் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

பெருந்தோட்டங்களில் தொழில்புரியவில்லை என்பதற்காக , அங்கு வசிக்கும் மக்களை குடியிருப்புக்களிலிருந்து வெளியேற்ற முடியாது. இறம்பொடை பிரதேசத்தில் இது தொடர்பில் அண்மையில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து மேலதிக தகவல்களை வழங்கினால் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

இறம்பொடை ஆர்.பி. தோட்டப்பிரிவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொழிலுக்கு வராத தொழிலாளர்கள் தமது லயன் வீடுகளை மீள ஒப்படைக்க வேண்டும் என்று தோட்ட நிர்வாகத்தினால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகனத்தினால் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படும் போது , அவை தொடர்பில் முறைப்பாடளிப்பதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் விசேட பிரிவொன்று காணப்படுகிறது. குறிப்பாக தொழிலாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என்று பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெருந்தோட்டங்களில் தொழில் புரியாமல் தோட்டப் பகுதிகளில் வசிக்கும் பலர் உள்ளனர். அவர்களை எந்தவொரு காரணத்துக்காகவும் இருப்பிடங்களிலிருந்து வெளியேறுமாறு கூற முடியாது. எனவே அண்மையில் றம்பொடை பிரதேசத்தில் குடியிருப்புக்களை விட்டு வெளியேறுமாறு தோட்ட நிர்வாகத்தினால் கடிதம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை வழங்கினால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

நன்றி வீரகேசரி

Related Articles

Latest Articles