‘பேஸ்புக்கால் வந்த வினை’ – ஆணி அடித்து சித்திரவதை! நடந்தது என்ன?

முகநூலில் கருத்து பதிவிட்ட இருவர் கடத்திச்செல்லப்பட்டு, காட்டுக்குள் வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கொடூரச் சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த 38 மற்றும் 44 வயதுடைய நபர்கள் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

இவர்களை கடத்திச்சென்று, சித்திரவதைக்கு உட்படுத்தியவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கண்டி பல்லேகல, பலகொல்ல பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய நபரொருவரே இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகக் கருதப்படுகின்றார் எனவும், அவரால் நடத்திச்செல்லப்படும் ஆன்மீக நிலையத்துக்கு எதிராக முகநூலில் தகவல் வெளியிட்டனர் எனக் கருதப்படும் இருவரே இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

முதலில் இவ்விருவரையும் பிரதான சந்தேக நபர் வீட்டுக்கு அழைத்துச்சென்று, அதன் பின்னர் அம்பிட்டிய பகுதியிலுள்ள காட்டுக்குள் கடத்திச்சென்று சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர் எனவும், சிலுவையில் வைத்து ஆணி அடிப்பதுபோல், பலகையொன்றில் வைத்து அவர்களுக்கு ஆணி அடிக்கப்பட்டுள்ளது என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

ஆன்மீக நிலையத்தை நடத்தி சென்ற பிரதான சந்தேக நபரும், கடத்துவதற்கும், சித்திரவதைக்கு உட்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட நபர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கடந்த 25 ஆம் திகதி இச்சம்பவம் தொடர்பில் பலகொல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles