ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்குரிய சாத்தியம் உள்ளது எனவும், பொதுத்தேர்தலின் பின்னர் இந்த சங்கமம் நடக்கலாம் எனவும் ஐதேகவின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ஐக்கிய மக்கள் சக்தியையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் ஒன்றிணைத்து தேர்தலில் போட்டியிட வைப்பதற்குரிய முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும், அந்த முயற்சி கைகூடவில்லை.
எனினும், இவ்விரு தரப்பும் ஒரு முகாமில் இருந்தவை. எனவே, இரு தரப்பினரும் இணைவதற்குரிய சாத்தியம் உள்ளது. பொதுத்தேர்தலின் பின்னர் இணைந்து, நாட்டு மக்களுக்கு யானையை வழங்கக்கூடிய சூழ்நிலை உள்ளது.
அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் நோக்கிலேயே பொதுத்தேர்தலிலும் நாம் சிலிண்டர் சின்னத்தை முன்வைத்தோம். பொதுத்தேர்தலில் ஆணை கிடைத்தால் நாட்டை ஆளவும் தயார். எதிர்க்கட்சி பதவி கிடைத்தால் அப்பணியையும் எமது அணி சிறப்பாக முன்னெடுக்கும்.” – என்றார்.










