” நாட்டு பொருளாதாரம் சீரழிவதற்கு ராஜபக்சக்கள் எடுத்த சில தவறான தீர்மானங்களே பிரதான காரணம். எனவே, அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டு மக்கள் இன்று ஒருவேளை உணவுக்கு கஷ்டப்படுகின்றார்கள் எனில், அதற்கு ராஜபக்சக்களே காரணம். ராஜபக்சக்கள் எடுத்த தவறான பொருளாதார முடிவுகளால்தான், நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது.
இந்நிலையில் ராஜபக்சக்களுடன் இணைந்து செயற்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு பொருளாதாரத்தை மீட்டதுபோல் கிரிக்கெட்டையும் மீட்பாராம். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னர் பொருளாதாரத்தில் செய்துள்ள மாற்றம்தான் என்ன? விலைவாசி குறைவடைந்துள்ளதா? மக்களுக்கு வாழ்க்கைச்சுமை குறைவடைந்துள்ளதா? இல்லை.
நன்றாக இருந்த கிரிக்கெட்டை அதலபாதாளத்துக்குள் தள்ளினர். இவ்வாறு தள்ளிவிட்டு மீட்பதாகக் கூறுவது வெட்கக்கேடாகும்.” – எனவும் வேலுகுமார் எம்.பி. குறிப்பிட்டார்.
