“பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவிநீக்கம் செய்யகோரும் பிரேரணை எதிர்வரும் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும்.” என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பொலிஸ்மா அதிபரை பதவி நீக்ககோரும் பிரேரணை, 115 எம்.பிக்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் விளக்கமளித்தார்.
இதன்போது அவர் கூறியவை வருமாறு,
” பிரேரணை முதலில் நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் இடம்பெறும். ஐந்து நாட்களுக்கு பிறகு ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்படும். அதன்பின்னர் நாடாளுமன்றம் கூடும் முதல் சந்தர்ப்பத்தில் அதாவது ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு 113 வாக்குகள் தேவை.
அதன்பின்னர் மூவரடங்கிய விசாரணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும். அந்த குழுவின் பரிந்துரைக்கமைய, பதவி நீக்ககோரும் பிரேரணை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அதற்கும் 113 எம்.பிக்களின் ஆதரவு தேவை.” – என்றார்.










