போடைஸ் பகுதி மக்களுக்கு வெள்ள அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆற்றை அகலப்படுத்துவதற்கான நடவடிக்கை துரித கதியில் ஆரம்பமாகும். இதற்கான கண்டிப்பான உத்தரவை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிறப்பித்துள்ளார் – என்று நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேலு தெரிவித்தார்.
போடைஸ் பகுதியில் அடை மழை பெய்ததால் ஆறு பெருக்கெடுத்து, தோட்டப்பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் 50 குடும்பங்களைச் சேர்ந்த 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை தோட்ட கிராம சேவகர் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் ரவி குழந்தை வேலு தெரிவித்தார்.
” போடைஸ் பகுதியிலுள்ள ஆற்றை அகலப்படுத்துவதற்கான நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான கோரிக்கை அரச அதிபரிடமும் விடுக்கப்பட்டிருந்தது. எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பணிகள் தாமதமடைந்தன. அண்மையில்கூட இது குறித்து பேச்சு நடைபெற்றது. இதற்கிடையில்தான் திடீரென வெள்ளம் புகுந்துள்ளது.
ஆற்றை விரைவில் அகலப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். வெகுவிரைவில் அதற்கான நடவடிக்கை இடம்பெறும்.
அதேவேளை, எல்பியன் பகுதியிலுள்ள தோட்ட குடியிருப்பொன்று மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. அவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.” – என்றார்.
