இலங்கைக்கு கடற்வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. எனவே, இந்த போதைப்பொருள் மாபியாவுக்கும் முடிவு கட்டப்பட்டு வருகின்றது. இதற்குரிய நடவடிக்கையின் போது கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடலட்டை சங்க பிரதிநிதிகளுடனான கூட்டம் கூட்டம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (18.10.2025) நடைபெற்றது.
இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வட பிராந்திய கட்டளைத்தளபதி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்பு திணைக்களம், கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனம், தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA), இலங்கை தேசிய நீர் உயிர் இன வளர்ப்பு அதிகார சபை (NAQDA) ஆகியவற்றின் அதிகாரிகளும், யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக அரசாங்கத்தால் கடந்த ஒருவருட காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பற்றியும், எதிர்கால இலக்குகள் சம்பந்தமாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
துறைமுகங்களை நவீனமயக்காமல், நவீன மீன்பிடி முறை உள்ளிட்ட நடவடிக்கைகள்மூலம் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
அரசியல் பலம் மூலம் காரியங்களை சாதித்தது அந்த காலம். எனவே, கடல் அட்டை பண்ணை நடவடிக்கை உட்பட கடற்றொழில் சார்ந்த நடவடிக்கைகளின்போது அனைத்து நடவடிக்கைகளும் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு அமையவே இடம்பெறும். அரசியல் விளையாட்டு இங்கு எடுபடாது எனவும் அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்தார்.
அத்துடன், எமது கடற்றொழிலாளர்களை சில போதைப்பொருள் மாபியாக்கள், போதைப்பொருள் கடத்தலுக்காக பகடைக்காய்களாக பயன்படுத்துவதற்கு முற்படுகின்றனர். அந்த மாபியாக்களின் வலைகளில் நாம் சிக்கிவிடக்கூடாது. ஆசை வார்த்தைகளை நம்பிவிடக்கூடாது.
சட்டவிரோத நடவடிக்கையென்பது எப்போதும் ஆபத்தானதாகவே இருக்கும். எனவே, போதைப்பொருள்களை முடிவுகட்டுவதற்குரிய அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் வேலைத்திட்டத்துக்கு கடற்றொழிலாளர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
கடல்மார்க்கமாகவே அதிகளவு போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. எனவே, கடற்றொழிலாளர்களை அந்த கும்பல் இலகுவில் இலக்கு வைக்கலாம். இது பற்றி மீனவ அமைப்புகள் விளிப்பாக இருக்க வேண்டும். தமது தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்தால் சட்டத்தன் பிடிக்குள் இருந்து தப்ப முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஓரிரு அத்துமீறல்களே இடம்பெறுகின்றன. இப்பிரச்சினை முழுமையாக தீர்ப்பதற்குரிய இராஜதந்திர மட்டத்திலான முயற்சிகள் இடம்பெறுகின்றன. அதேபோல கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு என்பவற்றை வலுப்படுத்துமாறு நான் கடற்படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என அமைச்சர் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.