முற்றுகையில் உள்ள காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இணங்கியதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று (18) திடீர் விஜயமாக இஸ்ரேலுக்கு வருகை தரவுள்ளார்.
இஸ்ரேல் தவிர்த்து காசாவுக்குள் நுழைவதற்கான ஒரே வாயிலாக உள்ள எகிப்துடனான ரபா எல்லை கடவையில் முக்கிய உதவிப் பொருட்களை ஏற்றிய டிரக் வண்டிகள் வரிசையில் காத்துள்ளன. எனினும் அவை எல்லை கடந்து காசாவுக்குள் அனுமதிக்கப்படுவது குறித்து நேற்று பின்னேரம் வரை எந்த உறுதியான அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.
ரபா எல்லையை திறப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு அருகில் எகிப்து சிறு நகரான அல் அரிஷில் சுமார் 160 டிரக் வண்டிகள் காத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதலில் 1,300 பேர் கொல்லப்பட்ட நிலையில் காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப்போவதாக இஸ்ரேல் உறுதிபூண்டுள்ளது.
இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக காசா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதில் 2,800க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் கால் பங்கினருக்கும் அதிகமானோர் சிறுவர்களாவர். 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசா மீது உணவு, நீர், மின்சாரம் மற்றும் எரிபொருளை துண்டித்து முழு முற்றுகை அமுல்படுத்தியிருக்கும் சூழலில் அங்கு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பைடன் இஸ்ரேல் பயணித்து நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார். இதன்போது காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல நெதன்யாகு அனுமதித்ததாக பிளிங்கன் தெரிவித்திருந்தார். அது பற்றி மேலதிக விபரங்கள் எதனையும் அவர் கூறவில்லை.
“இஸ்ரேல் தம்மை பாதுகாப்பதற்கு என்ன தேவை என்பது பற்றி ஜனாதிபதி கேட்டறியவுள்ளார். அந்தத் தேவையை பூர்த்தி செய்ய பாராளுமன்றத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என்று பிளிங்கன் தெரிவித்தார்.
ஈரான் முன்கூட்டிய நடவடிக்கை ஒன்று பற்றி எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் இந்தப் போர் பிராந்தியத்திற்கு பரவுவதை தடுப்பதற்கு அரபு நாடுகளை அணிதிரட்டவும் அமெரிக்கா முயன்று வருகிறது.
இன்று இஸ்ரேல் செல்லும் பைடன் தொடர்ந்து ஜோர்தான் சென்று அந்நாட்டு மன்னர் அப்துல்லாஹ், எகிப்து ஜனாதிபதி அப்துல் பதாஹ் அல் சிசி மற்றும் பலஸ்தீன அதிகாரசபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்திக்கவுள்ளார்.
இதேவேளை காசா போர் தொடர்பில் அரச தலைவர்களின் மாநாடு ஒன்றை எகிப்து நடத்தவுள்ளதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹகன் பிதான் தெரிவித்துள்ளார்.
