‘ நாட்டை பிளவுபடுத்துவதற்கு புலிப் பயங்கரவாதிகள், டயஸ்போராக்களாக முயற்சித்துவரும் சூழ்நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சவை பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ புலிப் பயங்கரவாதிகள், டயஸ்போராக்களாக இந்நாட்டை பிளவுபடுத்துவதற்கும், தமது இலக்கை அடைவதற்கும் தொடர்ந்து முயற்சித்துவருகின்றனர்;. அதேபோல உலகளவில் அடிப்படைவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிராதம் தலைதூக்கியுள்ளன.
இவற்றுக்கு எதிராக போராடி, போரை முடித்த தலைவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடப்பாடாகும்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அதேவேளை, எமது அரசியல் முகாம்தான் இந்நாட்டை அபிவிருத்தி செய்தது. எனவே, நாட்டை வீழ்துவதற்குரிய குரோத அரசியலில் ஈடுபடுவதற்கு நாம் தயாரில்லை.
உலகில் எந்நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ராஜபக்சக்கள் சட்டவிரோதமாக எதையேனும் சேமித்து வைத்திருந்தால் அவற்றை கொண்டுவாருங்கள். அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்றார்.