இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர்மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.
மலையகம், கொட்டகலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் உட்பட சில விடயங்களை தமிழ் தரப்புகள்தான் செய்தன என்பதுபோல் வெளியில் ஒரு மாயை காட்டப்படுகின்றது. இதற்கு பின்னால் இருந்து ஆட்சி அமைத்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த குடும்பம்மீது இதுவரையில் எந்த பாய்ச்சல்களையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை.
இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களை செய்த இராணுவத் தளபதிகள் மீதோ அல்லது அதனை மேற்கொண்ட அரசுகள்மீதோ எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் தமிழ் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது. இது தொடர்பில் நாம் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும்.” – என சிறிதரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.