போர் முடியும்வரை உக்ரைனில் தேர்தல் இல்லை

போர் முடிவுக்கு வரும் வரை நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடத்தப்படாது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி சுமார் 16 மாதங்கள் ஆகியுள்ளன. ஆனாலும் போரின் வீரியம் குறைந்தபாடில்லை. ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் உள்ளிட்ட நாடுகள், சோவியத் உடைந்த பின்னர் தனி நாடுகளாக அறிவித்துக்கொண்டன. தற்போது இந்த நாடுகளை தங்கள் வசம் கொண்டுவரும் வேலையை அமெரிக்கா ‘நேட்டோ’ அமைப்பு மூலம் முன்னெடுத்துள்ளது. எதிர் பார்த்தபடி பெரும்பாலான முன்னாள் சோவியத் நாடுகள் நேட்டோவில் இணைந்துவிட, உக்ரைனும் இதில் இணைவதாக கையெழுத்திட்டது.

இங்குதான் சர்ச்சை வெடித்தது. காரணம், உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தப்படும். இது பக்கத்து நாடான ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். எனவே உக்ரைன் இதில் இணைய கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தியது. ரஷ்யாவின் பேச்சை கேட்காத உக்ரைன் இதில் இணைவதில் உறுதியாக இருப்பதாக அறிவித்தது. எனவே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது.

இந்த போரில் தற்போது வரை சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 15,779 பேர் படுகாயமடைந்துள்ளனர். போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை செய்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை ரூ.3.44 லட்சம் கோடி மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா செய்துள்ளது. இன்று மேலும் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது. இது உக்ரைனை மிகவும் பலம் வாய்ந்த ராணுவ நாடாக மாற்றியிருக்கிறது. சுருக்கமாக சொல்வதெனில் இந்தியாவின் ஒட்டுமொத்த ராணுவ பட்ஜெட்டில் சுமார் 95% அளவுக்கு உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது போரின் தீவிரத்தை மேலும் மோசமாக்கியுள்ளது. இரு நாடுகளும் போரை கைவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஆனால் போர் நடந்துக்கொண்டிருப்பதால் இதற்கான தேர்தல் நடப்பது சந்தேகமாக இருந்தது வந்தது. தற்போது இதனை ஜெலென்ஸ்கி உறுதி செய்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, “நாட்டில் இராணுவச் சட்டம் நடைமுறையில் இருக்கும் போது அதிபர் தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என்று எங்கள் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. போர் முடிந்த பின்னர் 90 நாட்களுக்கு பிறகுதான் அதிபர் தேர்தல் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles