திருமணம் நிச்சயம் செய்யப்பட்டருந்த தனது புதல்வியின் திருமணத்திற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை அடகு வைத்து 40 இலட்சம் ரூபாவை பெற்று கசினோ சூதாட்டத்தில் தாய் ஈடுபட்டதாக மகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய தாய் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரளை சகஸ்ரவில் வசிக்கும் 21 வயதான மகள் செய்த முறைப்பாட்டின்படி 44 வயதான சந்தேத நபரான தாய் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளால் விலைக்கு வாங்கப்பட்டுள்ள இந்த தங்க நகைகள் இன்னும் இரண்டொரு மாதங்களில் நடைபெற இருந்த அவரது திருமணத்துக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த போதே தாயால் திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் தெரிவித்திருந்தார்.
தாய் அதனை அடகு வைக்கும் நிலையம் ஒன்றில் அடகு வைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் அதனை மீண்டும் ஒரு முறை அடகு வைத்து திரும்பவும் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அவ்வாறு திருடப்பட்ட தங்க நகைகளை மீண்டும் மீட்டுத் தருமாறு கேட்ட போதும் தாயார் அதனை தவிர்த்து வந்ததால் தாயாருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட தாய் பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது நகைகளை அடகு வைத்து பெற்றுக் கொண்ட 40 இலட்சம் ரூபாவை கசினோ விளையாட்டுக்கு பயன்படுத்தியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று முன்தினம் அழுத்கடை இலக்கம் 02 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டதாக பொரளை பொலிஸின் தலைமை பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன சமரசிங்க தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
