மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்திலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச மகளிர் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.










