சுதந்திர தின நிகழ்வென்பது மக்களுக்கானது. எனவே, 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு மக்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் (கலாநிதி) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்தார்.
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தனித்துக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு இன்று நடைபெற்றது.
தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம் என்ற தொனிப்பொருளில் பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இம்முறை சுதந்திர தின விழா இடம்பெறவுள்ளது. அத்தியாவசியமானவற்றிக்கு மாத்திரம் வரையறுத்து, மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைத்து, இம்முறை சுதந்திர தின விழா இடம் பெறவுள்ளதுடன், சாதாரண பொதுமக்கள் சுதந்திர தின வைபவத்தை பார்ப்பதற்கு அதிகமாக இட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
சுதந்திரத்தை வெற்றி கொள்வதற்காக அர்ப்பணிப்புச் செய்த பல்லாயிரக்கணக்கான தேசப்பற்றாளர்கள் காணப்படுவதாகவும் எனினும், பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக அந்த முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கின்றோமா? என்ற பிரச்சினை முன் உள்ள கேள்வி என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
புதிய அரசியல் கலாசாரம் ஒன்றும் மற்றும் புதிய அணுகுமுறை ஒன்றும் இந்த நாட்டிற்கு அவசியமாவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அதிகமான மக்கள் கடந்த சந்தர்ப்பத்தில் இதற்காகவே அணி திறண்டார்கள் என்றும், அவ்வாற் அணி திறண்ட மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காகவே இம்முறை சுதந்திர தின விழா இடம் பெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நாட்டின் சகல பிரஜைகளுக்கும் சமமான கவனிப்பு சிங்கள, தமிழ், முஸ்லிம் உட்பட சகல சமயத்தவர்களுக்கும் சகோதரத்துவத்துடன் செயற்படுகின்ற கனவை நனவாக்குவதற்கு இம்முறை 77 ஆவது சுதந்திர தின விழாவை பயன்படுத்துவதாக அமைச்சர் மேலும் விவரித்தார்.










