‘மக்களுக்காக வாழ்நாளில் மூன்றிலிரண்டு பகுதியை அர்ப்பணித்தவர்’

” தனது வாழ்நாளில் மூன்றில் இரண்டுப் பகுதியை மக்கள் சேவைக்காக அர்ப்பணித்து, தற்போதைய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுப் பெரும்பான்மை ஏற்படுத்திக்கொண்ட பெருமையுடன்  மக்கள் ஆட்சி புரிந்துகொண்டிருக்கும் மகத்தான மக்கள் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு , 75ஆஆவது பிறந்ததின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.”

இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரின் ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“வாழ்கையில் ஏற்றத்தாழ்வுகள் சகஜமானவை. அரசியலில் அவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்வாரெனப் பல சூழ்ச்சிகளை ஏற்படுத்தி, சதிவலை பின்னி, இலவுகாத்த கிளி போல் காத்திருந்த பலருக்கும், தன் பொறுமை எனும் ஆயுதத்தால், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை மீண்டும் நிரூபித்த பெருமைக்குரியவரே பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

சர்வதேசமே தரித்திடக் காத்திருந்த போதிலும், தன் மக்கள் சக்தியை மாத்திரம் நம்பி, நாட்டு மக்களுகாய் தன் வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்திருக்கும் பெருந்தலைவராகவே அவரை மக்கள் போற்றுகின்றனர்.

“எத்தகைய தடைகள் வந்தாலும், தளராத மனத்திடத்துடன், அத்தடைகளை மக்கள் சக்தி மூலம் உடைத்தெறியும் “அரசியல் வல்லமை”, “அரசியல் சாணக்கியம்”, “அரசியல் இராஜதந்திரம்” அனைத்தையும் திரட்டி, வெற்றிவாகை சூடிவந்த பெருமை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே சாரும்.

இன்றைய சூழ்நிலையில், நாட்டின் அனைத்து மக்களும் எதிர்பார்க்கும் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய ஆளுமை, அவரிடம் இருப்பதாகவே எதிர்பார்க்கப்படுகிறது. இனம், மதம், மொழி பேதமின்றி, அனைத்து மக்களதும் அபிலாசைகளைச் சீர்தூக்கி, சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தரவேண்டுமென்பதையே, பிரதமரிடம் மக்கள் வேண்டி நிற்கின்றனர்.

அதற்கான வல்லமை கிடைக்கப்பெறுவதோடு, நிஜமான மக்கள் தலைவராக, மக்களில் ஒருவராக, மக்களின் துயர் துடைப்பதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, நீண்ட ஆயுளும் சௌபாக்கியமும் கிடைக்க வேண்டுமென, எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” – என்றுள்ளது.

 

Related Articles

Latest Articles