மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைத்தது சீனா

இலங்கை அரச வங்கியான ‘மக்கள் வங்கி’யை கறுப்புப் பட்டியலில் இணைப்பதற்கு சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறி – கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால், சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகத்தினால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் இலங்கையுடனான சர்வதேச கொடுக்கல் வாங்கலின் போது , மக்கள் வங்கியினால் வெளியிடப்படும் கடன் சான்று பத்திரத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறும், எச்சரிக்கையுடனான நிர்வாகத்தை முன்னெடுக்குமாறும் அனைத்து சீன முதலீட்டாளர்களுக்கும் அறிவிப்பதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

உரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரு தரப்பினரிடையே ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டிற்கு அமைய வெளியிடப்பட்ட கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்துமாறு சீனாவின் சிந்தாவோ சீவிங் பயோடெக் நிறுவனம் , மக்கள் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வர்த்தக சட்ட திட்டங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக கொள்கைக்கு அமைய மக்கள் வங்கி செயற்படாது கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் சீன நிறுவனத்திற்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Latest Articles