மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் உடல் நல்லடக்கம்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடலுக்கு முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும், பக்தர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மதுரையில் தொன்மையான சைவ திருமடங்களில் முக்கியமானது மதுரை ஆதீனம் ஆகும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தில் சன்னிதானமாக அருணகிரிநாதர் பதவி ஏற்றார்.

கடந்த 1975-ம் ஆண்டு முதல் சுமார் 46 ஆண்டுகள் மதுரை ஆதீனமாக பொறுப்பில் இருந்த அருணகிரிநாதர் சைவ சமய வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் அருந்தொண்டாற்றினார்.

இவருக்கு வயது மூப்பின் காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண கிரிநாதர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இயற்கை எய்தினார்.

 அவரது உடல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஆதீன மடத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஆன்மீக பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நேற்று இரவு முதல் முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் ஆன்மீக பக்தர்களும் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ள அருணகிரிநாதர் உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அரசியல் பிரமுகர்களும் திரளாக கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து அவரது உடல் மாசி வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகள் தருமபுர ஆதீனம் மாசிலாமணி சுவாமி உள்ளிட்ட ஆதீனங்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

அருணகிரிநாதர் மரணம் அடைந்ததால் 293-வது ஆதீனமாக இளைய ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பதவி ஏற்கிறார். 10 நாட்கள் கழித்து மதுரை ஆதீன மடத்தில் புதிய ஆதீனம் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

Related Articles

Latest Articles