உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.
சூரியன் வானொலியில் நேற்று ஒளிபரப்பான ‘விழுதுகள்’ அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான் முதலமைச்சராவதற்கு முன்னரே 2007 – 2008 காலப்பகுதியில் சுரேஷ் சலேவை சந்தித்துள்ளேன்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, எதிரணி கோருவதுபோல சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு, அசாத் மொஸலானவை கொண்டுவந்து விசாரணை நடத்தட்டும், நானும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றேன்.
நான் சிறைச்சாலையில் இருந்தபோது மஹிந்த ராஜபக்ச என்னை இரு தடவைகள் சந்தித்தார், அதேபோன்று நாமல் ராஜபக்ச இரு தடவைகள் சந்தித்தார், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தனர், ஏன் மனோ கணேசன்கூட வந்து என்னை சந்தித்துள்ளார்.” – என்றார் பிள்ளையான்.
