மன்னாரில் வளைகுடாவில் உள்ள எரிபொருள் வளம் இலங்கையின் மொத்த கடன்களைவிட பல மடங்கு அதிகமாகும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள எரிபொருள் வளத்தைக் கணக்கிடும் போது அது சுமார் 267 பில்லியன் டொலர் மதிப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் நேற்று நடைபெற்ற எரிசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
”மன்னார் வளைகுடாவில் எண்ணெய், எரிவாயு துளையிடுதலில் முதலீட்டாளர்களுக்கு 50 சதவிகித பங்குகளை வழங்கினால் அரசாங்கம் 133.5 பில்லியன் டொலர்களை வருமானமாக பெற முடியும்.
இது நாட்டின் மொத்த கடன் மதிப்பு, 47 பில்லியன் டொலர்கள் ஆகும். எரிபொருள் வளம் இதனைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.. மன்னார் வளைகுடாவில் உள்ள எரிவாயுவிலிருந்து மட்டுமே நுரைச்சோலை மின்நிலையத்தை 120 வருடங்கள் இயக்க முடியும்.
அங்கு கிடைக்கும் எண்ணெயால் மட்டுமே சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 143 ஆண்டுகள் இயக்க முடியும்.’ ஏழு எண்ணெய் கிணறுகளில் ஒரு எண்ணெய், எரிவாயு கிணறு, ஆய்வுக்காக துளையிடுவதில் வெற்றி பெறுவது இயல்பானது.
எவ்வாறாயினும், இலங்கையில் தோண்டப்பட்ட 4 கிணறுகளில் 03 இல் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.” என்று அமைச்சர் தகவல் வெளியிட்டார்.
எரிசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெட்ரோலிய வள சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது குறித்து விளக்கமளிக்கும் போது அமைச்சர் உதய கம்மன்பில இந்தத் தகவலை வெளியிட்டார்.
இந்த சட்டமூலத்திற்கு ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியதாக தெரியவருகிறது.