வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லஹியா நகரில் பல மாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகளைக் குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் நேற்று வான்வழி தாக்குதலை முன்னெடுத்திருந்தது.
இந்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 73 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முந்தைய நாள், காசா சுகாதார அமைச்சகம் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களில் 35 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியது.
“இது இனப்படுகொலை மற்றும் இன அழிப்புக்கான போர். ஆக்கிரமிப்பு பயங்கரமான படுகொலை என்று பீட் லஹியாவில் நடந்த தாக்குலை ஹமாஸ் ஊடக அலுவலகம் விமர்சித்திருந்தது.
குடியிருப்பாளர்களும் மருத்துவ அதிகாரிகளும் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை குண்டுவீசி தாக்கி மருத்துவமனைகளை முற்றுகையிட்டு, முகாமை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்த மருத்துவம் மற்றும் உணவுப் பொருட்களை உள்ளே வரவிடாமல் தடுத்து வருவதாகக் கூறினர். மருத்துவமனையை காலி செய்யுமாறு இஸ்ரேலிய இராணுவத்தின் உத்தரவுகளை தாங்கள் மறுத்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.