மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை!

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மலேசியாவில் நஜீப் ரசாக் பிரதமராக இருந்த போது, 2015 ஆம் ஆண்டு அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதியான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய் கையாடல் செய்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த முறைப்பாடு மலேசியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரும் போராட்டங்களும் நடைபெற்றன.

இதையடுத்து அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனைகளின் போது 273 மில்லியன் டாலர் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டிருந்தன. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் அவருடைய 408 வங்கி கணக்குகளையும் முடக்கி வைத்திருந்தனர்.

நஜிப் மீது அரசுத்தரப்பு நம்பிக்கை மோசடி, பணமோசடி, அதிகார அத்துமீறல் உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

நஜீப் ரசாக் மீதான 7 குற்றச்சாட்டுக்களும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள கோலாலம்பூர் நீதிமன்றம் , அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. நஜிப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இத்தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்யப் போவதாக கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles