மலையக பெருந்தோட்ட மக்களுக்காக இந்திய உதவித்திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 3,799 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 10.000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரட்ன, பெருந்தோட்ட மக்களின் வீடமைப்பு திட்டங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் வீடுகள் நிர்மாண வேலைத்திட்டம் மற்றும் இந்திய உதவித் திட்டத்தின் கீழ் வீடமைப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்கமைய அமைச்சின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் தோட்டத்துறை மக்களுக்காக 4258 வீடுகளின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
அத்துடன் தற்போது மேலும் 1,471 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை இந்திய உதவித்திட்டத்தின் கீழ் வீடமைப்பு நடவடிக்கைகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றில் முதற் கட்டத்தில் 3,799 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்திய உதவித்திட்டத்தின் கீழான இரண்டாம் கட்ட வீடமைப்பின் போது 10.000 வீடுகளை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் வருடங்களில் வீடமைப்பு நிதி ஒதுக்கீட்டின் கீழ் தோட்டத் துறையில் வீடமைப்பு தேவைகளை கருத்திற்கொண்டு புதிய வீடுகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.










