தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் வி.கே வெள்ளையனின் 102ஆவது ஜனன தினம் இன்றாகும்.
வி.கே. வெள்ளையன் (வெள்ளையன் காளிமுத்து வெள்ளையன், நவம்பர் 28, 1918 – டிசம்பர் 2, 1971) இலங்கையின் மலையகத் தொழிற்சங்கவாதியும், அரசியல்வாதியும் ஆவார்.
பெருந்தோட்டக் கூலிகளாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தியர்களைத் தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள் கொண்டு வந்தவர் எனப் போற்றப்படுகிறார்.
உலக தொழிற்சங்க அமையத்தின் பிரதான செயற்பாட்டாளராக பன்னாடுகளால் மதிக்கப்பட்டவர். இவர் தனக்கென ஒரு குடும்பம், வீடு, மனைவி, மக்கள் எதனையும் வைத்துக் கொள்ளாது தொழிலாளர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து துறவி வாழ்க்கை வாழ்ந்ததால், மலையக தொழிற் சங்க வரலாற்றில் “தொழிற்சங்கத் துறவி” என இவர் போற்றப்படுகின்றார்.
#தொழிற்சங்க #வரலாறு
1942 ஆம் ஆண்டு இலங்கை-இந்தியர் காங்கிரஸ் தலைவர்களான கே. இராஜலிங்கம், எஸ். சோமசுந்தரம் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் பொகவந்தலாவை பகுதிகளுக்கு வருகை தரும் போது முத்துலெச்சுமி தோட்டத்தில் அமைந்துள்ள வெள்ளையனின் வீட்டிலேயே தங்கிச் செல்வர்.
இவர்களது ஆலோசனையின் பேரில் தொழிற்சங்கத்துறையைத் தெரிவு செய்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளராக மிகக்குறுகிய காலத்தில் தெரிவு செய்யப்பட்டார்.
தனக்கென ஒரு தனி வழியில் செயற்படும் நோக்கில் காங்கிரசிலிருந்து வெளியேறி 1965ஆம் மே நாள் அன்று தொழிலாளர் தேசிய சங்கத்தை நிறுவினார்.
சிந்தாமணி பத்திரிகை வெளியீடான “தந்தி” இதழில் மலையகப் பிரச்சினைகள் யாவை? எனும் தொடர் பத்தி ஒன்றினை ஓராண்டுக்கும் மேற்பட்ட காலமாக எழுதி வந்தார். இதன் சில பகுதிகள் ”மலையகப் பிரச்சினைகள் யாவை?” எனும் தலைப்பில் நூலுருவாக வெளிவந்தது. ஆங்கிலப் பத்திரிகைகளிலும் மலையகத்தவர்களின் பிரச்சினைகளை வெளிக் கொணர்ந்தார். முதன் முதலாக தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் தேவை என்ற கோரிக்கையை முன்னெடுத்தார்.
ஒரு வருடத்தில் ஒரு தொழிலாளி வேலை செய்த 14 நாள் சம்பளத்தை சேவைக் காலப் பணமாக (இது “14 நாள் காசு” எனப்படுகிறது) பெற்றுக் கொடுகக் வேண்டும் என தொழில் நியாய சபையில் வலியுறுத்தி வெற்றியும் கண்டார்.
