மலையக மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் -திகா எச்சரிக்கை

மலையக மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மாத்தளை எல்கடுவ ரத்துவத்தை தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மலையக மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு .அவர்கள் அமைதி காக்கின்றார்கள் என்பதற்காக கையாளாதவர்களாக தோட்ட நிர்வாகங்கள் கருதி விடக்கூடாது . அவர்கள் திருப்பி அடிக்க ஆரம்பித்தால் தோட்ட நிர்வாகங்கள் தோட்டத்தை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கடுமையான கண்டனத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எல்கடுவ பெருந்தோட்ட கம்பெனியின் தலைவரிடம் சம்பவத்தோடு தொடர்புடைய தோட்ட அதிகாரிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதோடு அங்கு வாழ்கின்ற மக்களுக்கான அவர்கள் கோரும் காணியினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளேன் .எனவே அதற்கான நடவடிக்கைகள் இதயசுத்தியோடு இடம்பெறும் என நம்புகின்றேன்.

இனி ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தோட்ட நிர்வாகங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பாரிய விபரீத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.”   என்றுள்ளது.

Related Articles

Latest Articles