நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக மலையகத்தில் முறையாக முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களைத் தற்போது விமர்சிக்கின்ற கோமாளிகள் குறித்து மலையக மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசியசங்கத்தின் அக்கரப்பத்தனை ,டிக்கோயா, டயகம ஆகிய பணிமனைகளில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
” நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்துவதற்கு முன்பு நூறு நாள் அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான முறையான வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த வீடமைப்புத் திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பின்பும் தோட்டப் பகுதிகளில்முறையான வீடமைப்பு கிராமங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த வீடமைப்புத் திட்டங்கள் குறித்து மகிழ்ச்சி அடைந்த இந்திய அரசாங்கம் கிடப்பில் கிடந்த மலையகத்துக்கான இந்திய வீடமைப்பு திட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பை முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் பொறுப்பு வைத்து அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டம் உட்பட தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கின்ற சில மாவட்டங்களில் இந்த வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்திய வீடமைப்பு கிராமங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.
நல்லாட்சி அரசாங்கத்தைத் தொடர்ந்து வந்த புதிய அரசாங்கத்தினால் இந்திய வீடமைப்பு திட்டங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதியொதுக்கீடுகளை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இல்லாமல் செய்து தொழிலாளர்களைப் பழிவாங்கி உள்ளது. இதனை மூடி மறைப்பதற்காகவே சில கோமாளிகள் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். கோமாளிகளின் பிரச்சாரங்களை மக்கள் நம்புவதற்கு தயாரில்லை.
கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட இடங்களில் தற்போது புற்கள் முளைத்து காணப்படுகின்றன. மேலும்நுவரெலியா மாவட்டத்தில் தோட்டப் பகுதிகளில் காபட் பாதைகள் நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டன.
இதற்கு முன்பு கொட்டகலையில் உள்ள காங்கிரஸ் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு செல்லுகின்ற 2 கிலோ மீற்றர் பாதை மாத்திரமே காபட் பாதையாக போடப்பட்டமையை மலையக மக்கள் நன்கு அறிவர். ஆகவே தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முன்பு மலையகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படாத அபிவிருத்தித் திட்டங்களை தற்போதாவது மலையக மக்களுக்கு நேர்மையாக செய்வதற்கு முன்வர வேண்டும். அதைவிடுத்து கோமாளித்தனமான பேச்சுகளால் எதையும் சாதித்து விட மமுடியாது.” – என்றார்.










