மஸ்கெலியா நகரில் 3 நாட்கள் வெசாக் பௌர்ணமி வலயம்: நாளை ஆரம்பம்
மஸ்கெலியா நகரில் மூன்று நாட்களைக் கொண்ட ‘வெசாக் பௌர்ணமி வலயம்’ நாளை (29) முதல் ஆரம்பமாகவுள்ளது. மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மஸ்கெலியா பிரதேச சபையும், மஸ்கெலியா வர்த்தக சங்கமும் இணைந்து இந்த வெசாக் வலயத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
வெசாக் கூடுகள் போட்டி
நாளை காலை 11:55 மணிக்கு மஸ்கெலியா பொது விளையாட்டு மைதானத்தில் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதில் சிறந்த முறையில் வெசாக் கூடுகளை அமைக்கும் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. இதன்படி:
முதலாம் இடம்: 10,000 ரூபாய்
இரண்டாம் இடம்: 7,500 ரூபாய்
மூன்றாம் இடம்: 5,000 ரூபாய்
அன்னதானம் (தன்சல்) வழங்கல்
நாளை (29ஆம் திகதி) மதியம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்பாக அன்னதானம் (தன்சல்) வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மஸ்கெலியா வர்த்தக சங்கமும் பிரதேச சபையும் இணைந்தே இந்த அன்னதான நிகழ்வை நடத்தவுள்ளன.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்










