முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம் உட்பட வரப்பிரசாதங்களை இல்லாது செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் செயல் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி விமர்சித்துள்ளது.
‘ மஹிந்த ராஜபக்சவை கொழும்பில் இருந்து மெதமுலனவுக்கு வெளியேற்றும் அரசியல் பழிவாங்கல் திட்டமே இதன் பின்னணியில் உள்ளது.” – என்று மஹிந்த ராஜபக்சவின் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டு மக்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கையில், அவற்றுக்கு தீர்வுகளை தேடாமல், முன்னாள் ஜனாதிபதிகள்மீது அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வரப்பிரசாதங்களை வழங்கும் நடைமுறை உலக நாடுகளில் உள்ளது. எனவே, முன்னாள் ஜனாதிபதிகளை பழிவாங்கும் நோக்கில் இங்கு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை இலக்கு வைத்து அல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பழிவாங்கும் நோக்கில், அவரை கொழும்பில் இருந்து அகற்றி மெதமுலனவுக்குள் முடக்கும் முயற்சியே இது இடம்பெறுகின்றது.
எனவே, மஹிந்தவை கொழும்பில் இருந்து வெளியேற்றும் சட்டமூலம் என இதற்கு பெயர் வைப்பதே பொருத்தமானதாக அமையும்.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது முன்னாள் ஜனாதிபதிகளுக்கு செல்லுபடியாகுமா என்ற கேள்வி எழும். எனவே, ஜனாதிபதி அநுர உட்பட இனி வரும் ஜனாதிபதிகளுக்குதான் அது ஏற்புடையதாக அமையும். அவ்வாறு இல்லையேல் சர்வஜன வாக்கெடுப்பு உட்பட அரசியலமைப்பு மாற்றம் ஊடாகவே இதற்குரிய நடவடிக்கை இடம்பெறவேண்டும்.” – எனவும் சட்டத்தரணி மனோஜ் கமகே குறிப்பிட்டார்.