“மாகாணசபை தேர்தல் முறைமை இல்லாதொழிக்கப்படவேண்டும்” என வலியுறுத்தும் பிரேரணையொன்று வலல்லாவிட பிரதேச சபையில் நேற்று (15) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்துக்குட்பட்ட வலல்லாவிட பிரதேச சபையின் மாநாந்த அமர்வு அதன் தவிசாளர் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.
இதன்போது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் நாலக தரங்க சமரசிங்க என்பவராலேயே ‘மாகாணசபை தேர்தல் முறைமையை ஒழிக்ககோரும்’ பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
25 உறுப்பினர்களைக்கொண்ட மேற்படி பிரதேச சபையின் நேற்றைய அமர்வில் 23 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
வாக்கெடுப்பின்போது ஒரு உறுப்பினர் சபையில் இருந்து வெளியேறினார் எனவும், ஒருவர் வாக்களிக்கவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய 21 உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து அதனை நிறைவேற்றியுள்ளனர்.
2018 இல் நடைபெற்ற உள்ளாட்சிசபைத் தேர்தலில் 14 உறுப்பினர்களுடன் ஆட்சி அதிகாரத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியது.
ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் அறுவர், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் மூவர், ஜே.வி.பியின் உறுப்பினர் ஒருவர், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் சபையில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஏனைய சபைகளிலும் இவ்வாறான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சரத் வீரசேகரவுக்கு சார்பான உறுப்பினர்கள் உத்தேசித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.