மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஏதேனும் தடைகள் இருப்பின் அவற்றை நீக்கி, அதிகாரப் பரவலாக்கத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு அவர் தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய மாகாணத்தில் மாகாண சபை உறுப்பினர்கள் 58 பேர் செய்த பணி தனியொரு ஆளுநரின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் மூன்று மாவட்டங்களின் தேவைகளையும் கவனிக்க வேண்டியவராக உள்ளார். இதேபோல் ஏனைய எ மாகாணங்களிலும் நிலைமை உள்ளது.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஏதேனும் தடைகள் இருப்பின், அதனை தீர்த்து வைத்து அதிகாரப் பரவலாக்கத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும்.
ஆளுநர் என்ற தனி நபரால் பலரது பணிகளை மேற்கொள்ளும்போது தனி ஒருவரின் கீழ் பணியாற்றும் அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்புக்கள் உருவாகின்றன. மாகாண சபைகள் முடக்கப்பட்டுள்ளதால் கிராம மட்டத்தில் சில முடிவுகளை எடுப்பதில் தற்போது தடைகள் ஏற்பட்டுள்ளன.
பலரால் எடுக்கப்பட வேண்டிய சில முடிவுகள் ஒரு சிலரது கையில் குவிக்கப்படுள்ளது. இதன் காரணமாகவே சில முடிவுகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது என்றார்.