” மாகாணசபைமுறைமைமூலம் நாடு ஒருபோதும் பிளவுபடாது. எனவே, உடனடியாக தேர்தல் நடத்தப்படவேண்டும்.” – என்று வடமத்திய மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் வலியுறுத்தினார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நல்லாட்சி அரசாங்கத்தின்போதுதான் சூழ்ச்சிமூலம் மாகாணசபைகளுக்கான தேர்தல் பிற்போடப்பட்டது. மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டது. இதற்கான முழு பொறுப்பையும் கடந்த ஆட்சியாளர்கள்தான் ஏற்கவேண்டும்.
அதேபோல் மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவதற்காக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதுதான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடாகும். தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், எமது கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்சவும் அறிவித்துள்ளனர்.
மாகாணசபைத் தேர்தல் பற்றி கதைக்கும்போது பதவி ஆசையால்தான் அறிவிப்புகள் விடுக்கப்படுகின்றன என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மை அதுவல்ல. மாகாணசபைகள்மூலம் மக்களுக்கு சிறந்த சேவை வழங்கலாம். கொள்கை அடிப்படையில் அரசியல் முன்னெடுக்கலாம். பலம்பொருந்திய சக்திகளை கட்டியெழுப்பலாம் என்பதனை புரிந்துகொள்ளவேண்டும். முதல்வர் பதவியை தியாகம்செய்துவிட்டே நான் அன்று மஹிந்த ராஜபக்ச பக்கம் நின்றேன்.
தனவந்தர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் மாகாணசபைகள் தேவைப்பாடாது. ஆனால் சாதாரண மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கும், நிவாரணத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் மாகாணசபைகள் முறைமை அவசியம். 80வீத நிர்வாகம் மாகாணசபைகளின்கீழ்தான் நடக்கின்றன. மாகாண சபைகளின்கீழ் எத்தனை பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளன என்பது தெரியுமா? மாகாணசபையில் காலடி வைக்காதவர்கள்தான் இன்று அது பற்றி விமர்சிக்கின்றனர்.
இனவாத கோணத்திலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. மாகாணசபை முறையால் நாடு பிளவுபடவில்லை. இனி பிளவும்படாது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் மறுசீரமைக்கப்பட்டால் மாற்றுவழி என்னவென்பது பற்றி எவரும் அறிவிக்கவில்லை.
மாகாணசபை முறைமையை மக்கள் அனுமதித்துள்ளனர். எனவே, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும். தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் வெற்றியளிக்க மாகாணசபை கட்டமைப்பு அவசியம். ” – என்றார்.