மாகாணசபைத் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கட்சி செயலாளர் சாகர காரியவசம்,
‘ மாகாணசபைத் தேர்தல் பல வருடங்களாக நடத்தப்படாமல் உள்ளது. தேர்தலுக்கு அஞ்சியே ரணில் விக்கிரமசிங்க மாகாணசபைத் தேர்தலை காணாமல் ஆக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொண்டார். இதற்கு ஜே.வி.பியின் எம்.பிக்களும் ஆதரவளித்தனர். ” எனவும் சுட்டிக்காட்டினார்.
பாதீட்டில் மாகாணசபைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது. எனவே, மக்களுக்கு சேவையாற்ற மக்கள் பிரதிநிதிகள் அவசியம். எனினும், நிதி அதிகாரத்தை ஆளுநர்கள் ஊடாக ஜனாதிபதி தம் வசம் வைத்துள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.
எனவே, மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.”- எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.










