” இலங்கைக்கு மாகாணசபை முறைமை அவசியமில்லை. எனவே, அதற்கான தேர்தலை அரசாங்கம் நடத்தக்கூடாது.” – என்று பௌத்த தேரர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக பரப்புரைகளில் ஈடுபட்ட எல்லே குணவங்க தேரர், முருத்தெட்டுவே ஆனந்த தேரர், பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் ஆகியோரே இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.
மாகாணசபைத் தேர்தலை பழையமுறைப்படி விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகிவருகின்றது என செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே அதற்கு தேரர்கள் இவ்வாறு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரர்,
” அமைச்சு மற்றும் எம்.பி. பதவியை பெறமுடியாமல்போன சிலர், மாகாணசபையிலாவது தமக்கு பதவி கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். ஆனால் இலங்கைக்கு மாகாணசபைகள் அவசியமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். ” – என்றார்.
அதேவேளை, ” மாகாணசபைக்கு ஒதுக்கப்படும் மக்களின் பணத்தில் 80 வீதமானவை அரசியல்வாதிகளை நடத்துவதற்கான செலவீனங்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன. எனவே, மாகாணசபைகள் தேவையில்லை.” – என்று பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் வலியுறுத்தினார்.
அத்துடன், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எல்லே குணவங்ச தேரர்,
” மாகாணசபைகள் வெள்ளை யானை என்பதே மக்களின் நிலைப்பாடாக இருக்கின்றது. வடக்கு, கிழக்கு மக்கள்கூட மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கோரவில்லை. அங்குள்ள மாகாணசபை உறுப்பினர்களும் இந்த கோரிக்கையை விடுக்கவில்லை. எனவே, எதற்காக தேர்தல் நடத்த அவசரப்படவேண்டும்?
மூன்றிலிரண்டு பலத்தை பெற்றுக்கொடுத்தோம், 69 லட்சம்பேர் வாக்களித்தனர். 20 ஆவது திருத்தச்சட்டம்மூலம் அதிகாரம் மேலும் பலப்படுத்தப்பட்டது. தற்போது மாகாணசபைத் தேர்தலை நடத்துவதன்மூலம் என்ன செய்யபோகின்றனர்? அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தி, அவர்களுக்கு வரப்பிரதாசங்களை வழங்கும் முயற்சியே இது. எனவே, தேர்தலை நடத்தும் முடிவுக்கு நாம் அரசுக்கு கடும் அதிருப்தியை தெரிவித்துக்கொள்கின்றோம்.” – என்று குறிப்பிட்டார்.










