தேசிய இனப்பிரச்சினைக்கானதொரு அரசியல் தீர்வாகவே மாகாணசபை முறைமை முன்வைக்கப்பட்டது. எனவே, அதற்கான தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்படவேண்டும். அதனை எதிர்கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் தயார் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மாகாணசபைத் தேர்தல் என்பது அரசியலமைப்பு ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமையாகும். எனினும் அத்தேர்தல் நீண்டகாலமாக நடைபெறாமல் ஆட்சிஅதிகாரம் ஆளுநர்கள் வசம் சென்றுள்ளது. இந்நிலைமை நீடிக்ககூடாது.
தேர்தல் முறைமை தொடர்பில் நாடாளுமன்றம் இன்னும் உரிய அனுமதியை வழங்காததாலேயே தேர்தலை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, தேர்தலை நடத்துவதற்கான சட்ட திருத்த யோசனையை அரசாங்கம் உடன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவேண்டும். பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு நாம் எதிர்ப்பு இல்லை.
எனவே, பழைய முறையில் தேர்தலை நடத்திவிட்டு அடுத்துவரும் காலப்பகுதியில் எந்த முறையில் நடத்தலாம் என்பது பற்றி பரீசிலிக்கலாம். அந்தவகையில் தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும். அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார்.” – என்றார்.