மாகாணசபைத் தேர்தல் மட்டுமல்ல மாகாணசபை முறைமையே வேண்டாம். புத்தாண்டு முடிந்ததும் இதனை உறுதியாக வலியுறுத்துவோம் – என்று அபயராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,
” நாட்டில் பொருட்களின் விலை உச்சம் தொட்டுள்ளது. மறுபுறத்தில் எண்ணைய் பிரச்சினையும் உருவெடுத்துள்ளது. நல்லாட்சியின்போது ஏற்பட்ட பாதிப்புகளை தவிர்க்கவே புதிய அரசை ஆட்சிபீடமேறவைத்தோம். ஆனால் இன்று நடப்பது என்ன? குறைகளை சுட்டிக்காட்டும் எம்மை விமர்சிக்கின்றனர். ஊழல், மோசடிகள் அதிகரித்துள்ளன.
விமல் வீரவன்ஸ, உதயகம்மன்பில, அபயராம விகாரை உள்ளிட்ட தரப்பினர் இல்லாவிட்டால் மொட்டு கட்சி என ஒன்று உருவாகியிருக்காது. நாம் ஒன்றரை வருடங்கள் பொறுமை காத்தோம். மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் அரசு எந்த இடத்தில் உள்ளது என்பது தெளிவாகும்.
மாகாணசபைத் தேர்தல் – முறைமை வேண்டாம். புத்தாண்டுக்கு பின்னர் நாம் பலமடைவோம். அப்போதும் இதற்காக உரத்து குரல் எழுப்புவோம். தோல்வியை நோக்கி பயணிக்கவேண்டுமென்றால் மாகாண தேர்தலை நடத்துமாறு குறிப்பிடுகின்றோம். குறித்த தேர்தல் அவசியமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.” – என்றார்.










