‘மாடி வீடு என்பது கட்டுக்கதை – தனி வீடுகளையே அமைப்போம் என்கிறார் ஜீவன்!

” மாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம். தனி வீடுகளையே நாம் அமைப்போம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின்கீழ் இயங்கும் தொண்டமான் கலாச்சார நிலையத்தில் 9ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் ஐயாவின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு இவ்விடத்துக்கு வருவோம். அன்று எனது தந்தை எம்மை அழைத்துவந்தார். இன்று அவர் இல்லை. அது பெரும் துயரை தருகின்றது. இருந்தாலும் நல்லுள்ளங்களை தேடிவைத்துவிட்டே எனது தந்தை சென்றுள்ளார். அவர்கள் இன்று என்னை அரவணைக்கின்றனர்.

மலையகத்துக்கான வீட்டுத்திட்டம் தொடர்பில் பிரதமருடன் அண்மையில் கலந்துரையாடல் நடத்தினோம். எனினும், மாடி வீடு, மாடி வீடு என அது தொடர்பில் தவறான கருத்து பரப்பட்டுவருகின்றது. கூரைக்கு பதிலாக ‘கொங்ரீட்’ போட்ட தனி வீடுகளையே நாம் அமைக்கவுள்ளோம். எனவே, போலித்தகவல்களை நம்பவேண்டாம். விரைவில் உண்மை என்னவென்பதை உங்களால் நேரில் காணமுடியும்.
சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மண்டபத்தின்கீழ் நான்கு நிறுவனங்கள் வருகின்றன. அவை தொடர்பிலும் கலந்துரையாடினோம். மேற்படி நிறுவனங்களில் வளப்பற்றாக்குறை இருந்தது. அவை குறித்து சுட்டிக்காட்டினோம்.
அதேவேளை, கலைஞர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும் என்பதுடன் அவர்களுக்கான களத்தை அமைத்துக்கொடுத்து உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும். கலைஞர்கள் வாழ்ந்தால் மட்டுமே கலைகள் வாழும். அவ்வாறு இல்லாவிட்டால் கலைகள் அழிந்துவிடும். எனவே, கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்காமல் கலைகளை பாதுகாக்கமுடியாது. அதனை நாம் நிச்சயம் செய்வோம்.
க.கிசாந்தன்

Related Articles

Latest Articles