மாவையின் வாழ்க்கை மிகப் பெரும் சரித்திரம்

மாவையின் வாழ்க்கை
மிகப் பெரும் சரித்திரம்

– ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வில் சிறீதரன் தெரிவிப்பு

“மாவை சேனாதிராஜாவின் வாழ்க்கை என்பது ஒரு மிகப் பெரிய சரித்திரம். எமது இனத்தைப் பொறுத்தவரை இனிமேல் இவ்வாறான ஒரு தலைவரை நாங்கள் பெற முடியாது. அவரின் எண்ணத்தில் எந்த நேரமும் இனம் பற்றிய சிந்தனை இருந்துள்ளது. யாரையுமே நோகடிக்காத ஒரு நல்ல மனம் அவரிடம் இருந்தது. அவர் இல்லாத இந்த ஆறு மாதங்களில் அவரது பலம் என்ன, அவரது பலவீனம் என்ன என இன்று பலர் அறிவதற்குத் தலைப்பட்டு இருக்கின்றார்கள்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

யாழ். சங்கானை கலாசார மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவை சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவுப் பகிர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“2001 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்படுத்தியிருந்த ஒற்றுமையை, 2010 இல் இருந்து அதற்குப் பின்னர் ஓரளவுக்கு பேணியதில் மாவை சேனாதிராஜாவுக்கு பெரும் பங்கு உண்டு.

என்னை அரசியலுக்குள் கொண்டு வந்ததும் அண்ணன் மாவை சேனாதிராஜாவே. அந்த நேரம் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக இருந்த இராசநாயகத்தை அரசியலுக்குள் கொண்டு வர முயற்சித்தோம். சில காரணங்களுக்காக அவர் விலகியதால் வைத்தியர் சத்தியமூர்த்தி, அரியரட்ணம், தர்மரட்ணம் எனச் சிலரை அரசியலுக்குள் கொண்டுவர முயற்சித்தும் அது பலனளிக்காமல் போகவே நான் அரசியலுக்குள் வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

மாகாண சபைத் தேர்தல் காலத்தில் நாங்கள் அவரிடம் பேசுகின்ற போது அவர் எம்மிடம், இனம் முக்கியம், இனத்துக்காகப் பாடுபட வேண்டும், அதற்காக நாங்கள் எந்த விட்டுக்கொடுப்பும் செய்ய வேண்டும் என்றார். அவரது இழப்பு என்பது தமிழ் மக்களை பொறுத்தவரை ஒரு பாரிய இழப்பு. அவர் தமிழ்த் தேசிய இனத்துக்குக் கிடைத்த ஒரு ஒப்பற்ற தலைவர்.

தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை எல்லா மாவட்டங்களுக்கும் கொண்டு சென்றவர் அண்ணன் மாவை சேனாதிராஜா. நிறையப் பேரால் பேசப்பட்டவராகவும் அல்லது விமர்சிக்கப்பட்டவராகவும் அவர் இருந்தார். அனைத்தையும் பொறுத்து இனத்துக்காக வாழ்ந்த மிகப் பெரிய ஒரு மனிதர் அவர்.

ஒருமுறை அவர் இறந்து விட்டார் என ஆனையிறவுப் பகுதியில் இராணுவத்தினர் அவரைத் தூக்கி வீசி விட்டுச் சென்றார்கள். அதற்குப் பின்னரும் அவர் உயிருடன் வந்தார் என்பது அபூர்வம். அதேபோல் அவர் 2001 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக ஊர்காவற்றுறை – தம்பாட்டிக்குச்  சென்றபோது அங்கு வைத்து ஈ.பி.டி.பியினரால் அவரது மண்டை பிளக்கப்பட்டது. அதற்குப் பின்னர்தான் அவரது உடலில் ஒரு சமநிலை மாற்றம் ஏற்பட்டது.

அவரது வாழ்க்கை என்பது ஒரு மிகப் பெரிய சரித்திரம். எமது இனத்தைப் பொறுத்தவரை இனிமேல் இவ்வாறான ஒரு தலைவரை நாங்கள் பெற முடியாது. இப்படியான ஒரு நல்ல மனிதருக்கு நிறைய மன வருத்தங்களை கொடுத்தவர்கள் பலர். மனோரீதியாக அவரைப் பாதிப்படையைச்  செய்தவர்கள் பலர். ஆனால், வரலாறு அவர்களுக்கு அந்தத் தண்டனையை திருப்பி வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. இயற்கையும் வரலாறும் தண்டனையை வழங்கும். அதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. நாங்கள் செய்வது உமக்கு என்பது ஒரு உலக நியதியும் விதியும் கூட. நல்லது செய்தால் நல்லது கிடைக்கும், கெட்டது செய்தால் கெட்டது கிடைக்கும்.” – என்றார்.
………………………

Related Articles

Latest Articles