தொழில்நிமித்தம்சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் மரணத்துக்கு நீதி வேண்டும் எனவும், அவரின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் டயகம கிழக்கில் மூன்று பிரிவுகளை சேர்ந்த தோட்டத்தொழிலாளர்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டயகம கிழக்கு பகுதியில் மின்சாரம் தாக்கி தோட்டத்தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
டயகம கிழக்கு மூன்றாம் பிரிவை சேர்ந்த 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமகிருஸ்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த தொழிலாளி, தொழிற்சாலை உத்தியோகத்தரின் பணிப்பின் பேரில் , அவரின் வசிப்பிட தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற போது – தோட்டத்தில் விலங்குகளின் பாதுகாப்புக்கு பொறுத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையிலேயே இன்று பணிபுறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
தோட்ட நிர்வாகமும் அக்கரப்பத்தனை கம்பனியும் உடனடியான தீர்வினை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர். நீதியும், இழப்பீடும் கிட்டும்வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் அறிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தொழிற்சாலை உத்தியோகத்தர் டயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்
