மின்வெட்டு தொடர்பில் மக்களைக் குழப்ப வேண்டாம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

மின்வெட்டு தொடர்பாக அறிவிக்கவோ அல்லது மின் துண்டிப்பை மேற்கொள்ளவோ தொழிற்சங்கங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(24) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொழிற்சங்கங்களுக்கு அதன் உறுப்பினர்களின் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடும் அதிகாரமே உள்ளது.

மின்சாரத்தைத் துண்டிப்பதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்ற அதிகாரம், சட்ட ரீதியாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கே உள்ளது.

நாளாந்தம் மின்சார துண்டிப்பு தொடர்பாக வெவ்வேறு வகையான அறிவிப்புகள் வெளியாக்கப்பட்டு மக்கள் குழப்பியடிக்கப்படுகிறார்கள். இதனைத் தவிர்க்க வேண்டும்.

பொதுமக்களும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும்வரையில் காத்திருக்க வேண்டும்.

தற்போது இருக்கின்ற நிலைமையில் மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதப்படுகிறது.

காரணம் மின்சார உற்பத்திக்கான எரிபொருட்களை வழங்குவதற்கு போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை மின்சார சபை, எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு வழங்க வேண்டிய கடன் தொகையைச் செலுத்தி முடிப்பதற்கான உத்தரவு திறைசேரிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

எனவே எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படாது.

எவ்வாறாயினும் நிலைமைகளை ஆராய்ந்து, மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டுமா, தேவையில்லையா என்பது தொடர்பாக நாளை நண்பகலுக்கு முன்னதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles