மியன்மாரில் 4,900 பேர் விடுவிப்பு: ஆங் சான் சூ கி தொடர்ந்து சிறை வைப்பு!!

மியன்மாரில் 4,900 பேர் விடுவிப்பு: ஆங் சான் சூ கி தொடர்ந்து சிறை வைப்பு!!

மியன்மாரில் புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ள அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு மியன்மார் இராணுவ அரசின் தலைவர் மின் ஆங் , பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.

மியன்மாரில் கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து இராணுவ ஆட்சி நடைபெறுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூ கி சிறையில் அடைக்கப்பட்டார்.

மியான்மர் தற்போது உள்நாட்டு போரை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இங்கு கடந்த மாதம் 28-ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 3,725 பேர் உயிரிழந்தனர். பாரம்பரிய கட்டிடங்கள் எல்லாம் இடிந்தன. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் விரைவில் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என ராணுவத் தலைவர் உறுதியளித்துள்ளர்.

இந்நிலையில் மியன்மாரில் பர்மிய புத்தாண்டு கடந்த 13-ம் திகதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. மியான்மரில் புத்தாண்டு விடுமுறையில் சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுவது வழக்கம்.

இதை முன்னிட்டு, அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கி சிறையில் இருந்து விடுவிக்க ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் உத்தரவிட்டார்.

வெளிநாட்டு கைதிகள் 13 பேரும் விடுவிக்கப்பட்டு, அவர்களது நாட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் சட்டத்தை மீறினால், அவர்கள் புது தண்டனையுடன், பழைய வழக்கில் மீதுமுள்ள தண்டனையை சேர்த்து அனுபவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஆங் சான் சூ கி உட்பட அரசியல் கைதிகள் 22,197 பேர் மியன்மாரில் இன்னும் சிறைகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles