மியன்மாரில் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியதுபோல இலங்கையில் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான ஷேயான் சேமசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் முக்கிய பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுவருகின்றனர்.
எதிர்காலத்தில் பிரதேச செயலாளர் பதவிக்கும் இராணுவத்தினர் நியமிக்கப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே, எதிர்காலத்தில் மியன்மாரில்போன்று இராணுவ ஆட்சியேதும் ஏற்படக்கூடுமா என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மியன்மாரில் இராணுவ ஆட்சி ஏற்பட்டகையோடு, மங்கள சமரவீரதான் இது குறித்து எச்சரிக்கை விடுத்து முதல் அறிக்கையை வெளியிட்டார். மியன்மாரில் ஏற்பட்ட நிலைமை இங்கு ஏற்படாது.
அத்துடன் பிரதேச செயலாளர் பதவிக்கு, சிவில் அதிகாரிகளுக்கு பதிலாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர் எனக்கூறப்படுவது பொய்யாகும். அவ்வாறான நியமனங்கள் வழங்கப்படாது என்பதனை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றோம்.
மியன்மாரில் ஏற்பட்டதுபோல் இலங்கையில் ஏற்படவேண்டும் என எதிரணி உறுப்பினர்கள் சிலர் விரும்புகின்றனர். இராணுவ சதி புரட்சிக்கு இங்கு இடமில்லை. அவ்வாறு நடக்கவும் நடக்காது.
அதேவேளை, மனித உரிமை குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி இலங்கைக்கு விடுக்கப்படும் சவால்களை நாம் நிச்சயம் உரியவகையில் எதிர்கொள்வோம்.” – என்றார்.
