தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 37 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதிபொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்கள் எவராயினும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோன்று அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கமைய 1562 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.