முகத்தின் மீது கோபத்தில் மூக்கை வெட்டிக் கொள்வதைப் போன்று அரசின் மீதான கோபத்திற்காக முழுநாட்டிலும் கொவிட்டை பரப்ப வேண்டாம் என்று எதிரணியிடம் கோருகிறோம். எதிர்ப்பை தெரிவிக்க எத்தனையோ மாற்று வழிகள் இருக்கின்றன. இது கூட தெரியாதவர்களால் எப்படி ஆட்சியை பிடிக்க முடியும் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்ட நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் உரையாற்றிய அவர், உங்கள் அரசு இன்றிருந்தாலும் இதே நெருக்கடிகளை சந்தித்திருக்கும். பாரிய உற்பத்தி மறுமலர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. நல்ல நோக்கத்துடனே சேதனப் பசளை பயிர்ச்செய்கையை ஜனாதிபதி அறிமுகப்படுத்தினார்.
நல்லநோக்கம் மற்றும் அது வெற்றி பெற போதுமானதல்ல. விவசாயிகளுக்கு பசளை வழங்கும் பொறுப்பை உரக்கம்பனிகளுக்கு வழங்கியது ஜே.ஆர் தான். ஆனால் அதற்கு முன்னர் பயிர் அதிகாரி ஒருவரே இருந்தார். அவர் தான் நிலத்திற்கு உகந்த பசளையை அவர் பரிந்துரைப்பார். 100 வீதம் சேதனப் பசளை பயன்பாடு என்றோ 100 இரசாயனப் பசளை பயன்பாடு என்றோ தீர்மானித்து இதனை மேற்கொள்ள முடியாது. வர்த்தக நோக்கிலான பயிர்ச்செய்கையில் அதற்கு ஏற்றவாறான வாய்ப்பு இருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என பல நாடுகள் தமது அரிசி கையிருப்பை விற்பதை நிறுத்தியுள்ளன.
எத்தகைய குறைபாட்டை தெரிவித்தாலும் தடுப்பூசி ஏற்றுவதில் வெற்றி பெற்றுள்ளதை எதிரணி ஏற்க வேண்டும்.
உலகில் பழைய சம்பிரதாய முறைக்கு பதிலாக புதிய வழிகளை தேடும் நிலையில் எதிரணியும் புதிய வழிகளை பயன்படுத்த வேண்டும். பசுமை வலயத்தில் இருந்து சிவப்பு வலயத்திற்கு மாறினால் விமான நிலையங்களை மூட நேரிடும். சுற்றுலா பயணிகள் வருகை வீழ்ச்சி அடையும். எதிர்ப்பை முன்வைக்க புதிய வழிகளை தேடும் அளவு தொலைநோக்கம் இல்லாவிட்டால் எப்படி ஆட்சியை பிடிக்கப் போகிறீர்கள்.
முகத்தின் மீது கோபத்தில் மூக்கை வெட்டிக் கொள்வதைப் போன்று அரசின் மீதான கோபத்திற்காக முழுநாட்டிலும் கோவிட்டை பரப்ப வேண்டாம் என்று கோருகிறோம். நானும் வாசு தேவநாணயக்காரவும் நிவ் போற்றஸ் விவகாரம் தொடர்பில் தனியாக சட்டத்தரணிகளை நிறுத்த இருக்கிறோம். பஸ்களை நிறுத்துமளவு பெரிய கூட்டம் வரவில்லையே. எமக்கும் கவலை தான்.